நீ உயிரணுவாய் என் அண்டம் புகுந்தாய்
உள்ளுறுப்புகள் ஒன்றற்று;
வெறும் தலைவால் மாதிரி மட்டும் கொண்டு.
நீர்கருப்பையில் வந்தமர்ந்தாய்
என் சதை, ரத்தம் - கொஞ்சம்
உருவசாயலையும் கடன் கேட்டு..
அமர்ந்து கொண்டே நீ வளர்ந்தாய்..
வாழ்வதனை நான் வாழ்ந்தேன்...
மும்மாதம் முதல் தொடங்கி
என் உடல் நிலையும் மாறக்கண்டேன்..
தலைசுற்றி அசதி கொல்ல,
உடலெல்லாம் வலி பிடுங்க
இரவுறக்கம் வர மறுத்து
விடி வேளையிலே வந்தயர்த்த,
வாய் சென்ற உணவதுவும்
சென்ற வழி திரும்பி வர...................
அத்தனைக்கும் அஞ்சாமல்,
உனக்கெனவே பொறுத்திருந்தேன்..
ஐம்மாதம் வரை தன்னில்
உன் அசைவை நான் அறியவில்லை
ஆறதுவின் தொடக்கத்திலே
உன் ஆர்ப்பாட்டம் மெலிதுணர்ந்தேன்.
எட்டின் நடு மாதம்....
கைகுத்தி கால் உதைத்து
தலை உருட்டிப் பிரண்டிட்டாய்..
ஞானிகளின் "யோக" பலனாம்-
உடலுக்குள் உயிர் நெளியும் ஆனந்தம்
அதை உணரக் கண்டேன்..
மாதம் ஒன்பதைக் கடந்ததுவே...
வயிற்றுக் குடிலில் மட்டும் நீ இருந்தாய் - ஆனால்
கால்விரல் நுனி வரை
நீ பரவும் கவனம் கொண்டு
மென் பாதம் வைத்திட்டேன்..
முன்னூறு நாள் தொடங்க,
உன் உள்ளிருப்பு முடிந்ததுவாம்..
இப்புவியில் ஆண் உணரா மனவலிமை
உனை வெளியேற்றும் வலி தாங்க
நீ எனக்குப் பரிசளித்தாய்..
எனைப் பெண்ணென உணர்ந்தமுதல்
உடல் போர்த்தியேப் பழகிட்டேன்..
மருத்துவர்கள் சூழ்ந்திருக்க
நீ வரும் வழி காட்ட
எப்படியோ துணிந்திட்டேன்..
என் உடலெல்லாம் வலி பாய
நீ தலை எட்டிப் பார்த்திட்டாய்..
உன் உடல் முழுதும்
இவ்வுலகம் வர,
"நான் தாயாகிப் போனேனே
நான் தாயாகிப் போனேனே.........."
1 comments:
so nice devi kep up the good work > u have tallent so dont stop this for any reasons please keep on writting.
Post a Comment