skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

தளும்பியே களைத்த தண்ணீர....!!! (அல்லது) தண்ணீர் குடுவை வேதாந்தம்

சில வினாடிச் சூழ்நிலையில்
எனைச் சுற்றி இருந்த நீர்த்துளிகள் எல்லாம்
தாவி குதித்து உருண்டு ஓடிட,
மத்தியிலிருக்கும் நானோ,
சற்றும் ஓயாமல்,
தளும்பியே களைத்த தண்ணீர்.....!!!
ஆயிரம் நீர்த்துளிகள் சேர்ந்து,
என் மேல் விழுந்து அமுக்கிய போதிலும்,
தேங்கிப் போய் தங்கி விடாமல்,
திறன் கொண்டு மேலே வந்து,
மத்தியிலே தளும்பி நிற்ப்பேன்....
நான் இருக்கும் குடுவையின்
மூலை முதல், முடுக்கு வரை அறிந்து வந்தவள்...
ஆனால் அவ்வறிவு, வெறும் குடுவையியல் மட்டுமல்ல.....
நீர்த்துளிகள் பற்றிய வேதாந்தமும் கூடத்தான்....
பல துளிகள் இங்கே ஒன்று சேர்ந்து வசித்திருக்க,
என் "துளி" உடம்பை
"தண்ணீர்" எனக் கூறிக்கொள்ளும் கர்வம் மிகுந்தவள்...
ஆனாலும் சில வினாடிச் சூழ்நிலையில்,
வெற்றி கண்டு
கீழே தாவி உருண்டோடிய துளிகளுக்கு மத்தியில்,
தளும்பியே களைத்த, ஆனால்......
"தனித்து நிற்கும் தண்ணீர் நான்.......!!!!"
0 comments

ருத்ரப் பாவை..

சடுதிப் புறப்பாட்டில்,
இறக்கைகள் பிய்ந்து -
பிராணத் தேடலின் வேர்க்காற்று
பலமாய் குருதியில் கலந்து
கொப்பளிக்கும் குமிழிகளை
தன் கூர் அலகில் தோய்த்தெடுத்து,
எதிர் நிற்கும் மானுடம் துளைக்க
பறந்து செல்லும்
என் சிவப்பு "ஆத்திரப்" பறவையும்
அதனின் மொத்த பளுவும்;

அழுத்தச் சமன்நிலை
செறிவுற்று நிரம்பி,
வெடிக்கத் தடமற்று,
உப்பித் தொங்கும் நிமிடத்தில்
என் விரல் தூக்கி எறிந்து
தெறிக்கும் அத்தனை சுக்கிலும்
என் தொங்கி நின்ற அகங்காரம்!!

நானே - என் அத்தனைக்கும் சல்லடை...
ஆத்திரம் வடிகட்டி
சக்கைப் பருகல் பல நேரம்;
நானே - என் அத்தனைக்கும் குயவன்....
ஆத்திர மண்கொண்டே
பாண்டங்கள் பல நேரம்...

நேர்க்கோட்டுச் சூழலில்,
சுழியேற்றித் தடம் மாற்றி
அதனூடே சுழித்துப் போன
ருத்ரப் பாவையாய்....
நானே,
என் அத்தனைக்கும் நானே...
0 comments

ஒரு கன்றின் ஒரு நாள் கதை...

அவன் இட்ட வைக்கோல்என் கால் வயிறு அடைத்திருக்க,
மீதத்திர்க்காய் தலைதூக்கிஎன் தாயைக் கண்டேன்...
"கோ" மாதா அவளும் தன்னை
தாம்பினாலே சிறையும் தந்து,
உயிர் பரிதவிக்க,
ஊன் அங்கே வெண்ணிறத்தில் கரையக் கண்டேன்...
இவ்விடத்தே தாம்பிர்க்குப் பஞ்சமில்லை,
என் கழுத்தும் அதன் வசமே...
என் முக்கால் வயிறு தீயெனவே எரிந்திருக்க,
கோவதனை ஆர்வமேனப் பார்த்திருந்தால்,
ஊன் கரைதல் அதன் கண் வழியே - நிறமில்லா -
ஆனால்உப்புச் சுவைக் கொண்ட திரவம் கொண்டு நடக்கிறதே.....!!!
அது,
தன் கன்றிர்க்காய் பொங்கிவரும் அமிர்தம் தன்னை
அவன் கடத்திச் செல்லும்ஆத்ம ஊனின் நோவினாலா?
இல்லை அவன் கடத்திச் செல்லும் மும்முரத்தில்
அதிகமாய் ஓர் கை இழுவை தந்த
செதில் ஊனின் வலியினாலா?
அதை நினைதிங்கே நான் அழும் நேரம்
அவிழ்த்து விட்டான் என் தாம்பதனை...
என் தாயின் ஊன்வலியை போக்கிடவும்,
என் வயிற்றின் எரிச்சலையும் நீக்கிடவும்,
தாவிகுதித்து ஓடிச்சென்று
சுவைதிட்டேன் என் தாயின் காம்புவழி பெருகும்
"என் உணவதனை"...
அடக்கொடுமை!!
என் தாயின் ஊன் நோயும் அடங்கவில்லை,
என் பசியும் தீரவில்லை - ஆனால் தீர்ந்திட்டதாம்
இன்றைய உணவுச் சுரப்பின் அளவு மட்டும்...!!!!
0 comments

புத்தன் வெட்டிய போதி மரம்...

புத்த புள்ளி எல்லை மட்டும்
பரவிக் கனத்த "போதி" யதை
கூர் ஆயுத முனையதிலே
ஆனைபல விசையேற்றி,
"வேர்கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்...
...........................
"அவனே,
அம்மர நிழலடியில்,
இச்சைகளை ஈது விட்டு
இன்பத்தை இரை செய்தான்..
பின் வென்று ஈன்ற இன்பத்தை
பகிந்து விடக் கொள்கை செய்தான்!!
...................
போதி விதைபிடுங்கி பரப்பிவிட்டால்
புவிநெடுக ஞான ஒளி பரவிடுமோ......??
விடும் - எனவே நினைத்திருந்து
"ஆசை" கொண்டு காத்திருந்தான்.....
தோற்று விட்டான் சித்தார்த்தன்!
கௌதமனாய் உருமாறி!!
......................
இம்மரம்,
அதனுள் முதன்பிறந்த வேர்த் தொடங்கி
கடைத் தோன்றி வேர் வரையில்
ஞானத்தை அப்பிக் கொண்டு,
கிளை வழியே அச் "சாரம்" புகுத்தும்...
இதோ...
" அவ்வேர்க் கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்..."
....................
கொய்தெடுக்கும் அவ்வேர்ப் பலனை,
புவி பரவிய மண்துகள் முழுதும்
புகுத்திவிடத் திட்டமிட்டு
புவியெங்கும் காடாக்கி
"போதி" யிலே செழிக்கச்செய்ய,
"வெட்டுகிறான் புத்தனவன்...
வேர்க் கொய்யும் நோக்கினிலே"
0 comments

"நான் தாயாகிப் போனேனே....."

நீ உயிரணுவாய் என் அண்டம் புகுந்தாய்
உள்ளுறுப்புகள் ஒன்றற்று;
வெறும் தலைவால் மாதிரி மட்டும் கொண்டு.
நீர்கருப்பையில் வந்தமர்ந்தாய்
என் சதை, ரத்தம் - கொஞ்சம்
உருவசாயலையும் கடன் கேட்டு..
அமர்ந்து கொண்டே நீ வளர்ந்தாய்..
வாழ்வதனை நான் வாழ்ந்தேன்...
மும்மாதம் முதல் தொடங்கி
என் உடல் நிலையும் மாறக்கண்டேன்..
தலைசுற்றி அசதி கொல்ல,
உடலெல்லாம் வலி பிடுங்க
இரவுறக்கம் வர மறுத்து
விடி வேளையிலே வந்தயர்த்த,
வாய் சென்ற உணவதுவும்
சென்ற வழி திரும்பி வர...................
அத்தனைக்கும் அஞ்சாமல்,
உனக்கெனவே பொறுத்திருந்தேன்..
ஐம்மாதம் வரை தன்னில்
உன் அசைவை நான் அறியவில்லை
ஆறதுவின் தொடக்கத்திலே
உன் ஆர்ப்பாட்டம் மெலிதுணர்ந்தேன்.
எட்டின் நடு மாதம்....
கைகுத்தி கால் உதைத்து
தலை உருட்டிப் பிரண்டிட்டாய்..
ஞானிகளின் "யோக" பலனாம்-
உடலுக்குள் உயிர் நெளியும் ஆனந்தம்
அதை உணரக் கண்டேன்..
மாதம் ஒன்பதைக் கடந்ததுவே...
வயிற்றுக் குடிலில் மட்டும் நீ இருந்தாய் - ஆனால்
கால்விரல் நுனி வரை
நீ பரவும் கவனம் கொண்டு
மென் பாதம் வைத்திட்டேன்..
முன்னூறு நாள் தொடங்க,
உன் உள்ளிருப்பு முடிந்ததுவாம்..
இப்புவியில் ஆண் உணரா மனவலிமை
உனை வெளியேற்றும் வலி தாங்க
நீ எனக்குப் பரிசளித்தாய்..
எனைப் பெண்ணென உணர்ந்தமுதல்
உடல் போர்த்தியேப் பழகிட்டேன்..
மருத்துவர்கள் சூழ்ந்திருக்க
நீ வரும் வழி காட்ட
எப்படியோ துணிந்திட்டேன்..
என் உடலெல்லாம் வலி பாய
நீ தலை எட்டிப் பார்த்திட்டாய்..
உன் உடல் முழுதும்
இவ்வுலகம் வர,
"நான் தாயாகிப் போனேனே
நான் தாயாகிப் போனேனே.........."
1 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ▼  2010 (12)
    • ►  July (3)
    • ►  August (4)
    • ▼  September (5)
      • "நான் தாயாகிப் போனேனே....."
      • புத்தன் வெட்டிய போதி மரம்...
      • ஒரு கன்றின் ஒரு நாள் கதை...
      • ருத்ரப் பாவை..
      • தளும்பியே களைத்த தண்ணீர....!!! (அல்லது) தண்ணீர் கு...
  • ►  2011 (2)
    • ►  February (1)
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio