சடுதிப் புறப்பாட்டில்,
இறக்கைகள் பிய்ந்து -
பிராணத் தேடலின் வேர்க்காற்று
பலமாய் குருதியில் கலந்து
கொப்பளிக்கும் குமிழிகளை
தன் கூர் அலகில் தோய்த்தெடுத்து,
எதிர் நிற்கும் மானுடம் துளைக்க
பறந்து செல்லும்
என் சிவப்பு "ஆத்திரப்" பறவையும்
அதனின் மொத்த பளுவும்;
அழுத்தச் சமன்நிலை
செறிவுற்று நிரம்பி,
வெடிக்கத் தடமற்று,
உப்பித் தொங்கும் நிமிடத்தில்
என் விரல் தூக்கி எறிந்து
தெறிக்கும் அத்தனை சுக்கிலும்
என் தொங்கி நின்ற அகங்காரம்!!
நானே - என் அத்தனைக்கும் சல்லடை...
ஆத்திரம் வடிகட்டி
சக்கைப் பருகல் பல நேரம்;
நானே - என் அத்தனைக்கும் குயவன்....
ஆத்திர மண்கொண்டே
பாண்டங்கள் பல நேரம்...
நேர்க்கோட்டுச் சூழலில்,
சுழியேற்றித் தடம் மாற்றி
அதனூடே சுழித்துப் போன
ருத்ரப் பாவையாய்....
நானே,
என் அத்தனைக்கும் நானே...
0 comments:
Post a Comment