புல் - பூண்டு முதல் தொடங்கி,மனிதன் வரை,
ஆறறிவு பட்டியல் தந்த - அறிவியலையும்,
ஆத்மவியலையும் குடைந்தெடுத்த -அனைவருக்கும்,
என் குழப்பம் மிகுந்த வணக்கங்கள்....
எண்களின் கணக்கு முடிவில்லாமல் இங்கிருக்க,
இவ்வுலகில்,
ஆறு வரைதான் அறிவென்று சொன்னால்,
மிச்சங்களின் கணக்கு தான் என்ன?
இன்னொரு மனிதனுக்காய்,
செயற்கை இதயம் செய்யும் வரைசென்று விட்ட நாம்...
நமக்கு அடுத்து வரும் ஐந்து முதல்,
ஒன்று வரையானஅறிவினங்களுக்கு எல்லாம்,
கடவுள் தொழில் (காத்தல், படைத்தல், அழித்தல்)
செய்யவில்லையா?
அவைகளுக்கு நாமே கடவுள் எனஒப்புக்கொள்வீரா?
எனில்,
ஏழு தொடங்கி மீதம் உள்ள அனைத்திலும்,
எதாவது ஒரு அறிவு எண் கொண்ட உயிரினம்,
ஆனால் அடிப்படை உருவம் எதும் கொண்டிலா உயிரினம் -
அது எங்கேனும் இருந்து வந்தால்?
அதற்கு,
நம்மை,
நம் சிந்தனையை ஆட்கொள்ளும் சக்தி,
மற்றும்நம்மைச் சரணடையச் செய்யத் தூண்டி,
சில சமயம் வரம் ஈயும்,
ஆனால் பல சமயம் கழுத்தறுக்கும்
முதலாளித்துவ கொள்கை கொண்டும் இருந்தால்....
அவனே நமக்கென கடவுள் தொழில் செய்து வந்தால்....
அவனே.....
இறையாய் இருந்தால்.......
இல்லை என்கிறீரா?
அப்போது கணிதவியலில்
எண்களின் தொடர்ச்சியை ஆறு - உடன் முடித்துக்கொள்ள
அனுமதி கேட்டால்,
இச்சிறுமியின் கோரிக்கை எடுபடுமா?
எதாவது ஒரு "இயல்" ல்,
இதற்கு பதிலுண்டேனில்,
தெரிந்தவர்கள் மூக்குடைப்பு விளக்கம் தரக் கோருகிறேன்...
0 comments:
Post a Comment